வல்வை புளூஸ் “பொன் விழா மலர்” இல் வெளிவந்த திரு.மு.தங்கவேல்(தங்கப்பா) பற்றிய சிறு பதிப்பு:
வல்வை புளூஸ் கழகத்தின் மூன்று தலைமுறைகளுடன் திரு.மு.தங்கவேல்
திரு.மு.தங்கவேல் அவர்கள் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் ஆரம்பித்த காலத்திற்குச் சிலவருடங்கள் பின்னால் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்திற்காக கைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் விளையாட ஆரம்பித்தார். இவர் சிதம்பராக் கல்லூரியில் பல வெற்றிகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். அது போல வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி பல வெற்றிகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர். 20 வருடங்களுக்கு மேல் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்திற்காக உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம் விளையாடியவர்களில் திரு.மு.தங்கவேல், திரு.க.தேவசிகாமணி, திரு. யு.ஏ அருணாச்சலம், திரு.k.தங்கவடிவேல் போன்றோர் முதன்மையானவர்கள்.
சீன நாட்டின் உதைபந்தாட்ட அணி நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 73ம் ஆண்டளவில் விளையாடிய போது வல்வை புளூஸ் விளையாட்டு வீரர் கட்டியண்ணா தலைமையிலான பருத்தித்துறை உதைபந்தாட்டக் கோஷ்டிக்காக விளையாடியவராவார். அது மட்டுமின்றி கண்டி, குருநாகல், திருகோணமலை, வவுனியா என வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் சுற்றுலாச் சென்ற போதெல்லாம் புளூஸ் கோஸ்டியில் அங்கம் வகித்தார்.
திரு.தங்கவேல் அவர்கள் உதைபந்தாட்டத்தை போன்றே கைப்பந்தாட்டம் செற்ரப், ஓவர்கேம் இரண்டிலும் மிகுந்த திறமை மிக்கவர். ஓவர்கேமை பொறுத்தமட்டில் புளூஸ் விளையாடிய காலங்களில் அடித்து விளையாடுவதில் திரு.சிவநாதன், திரு.தங்கவேல் ஆகியோர் சிறப்பானவர்கள். ஒரு முறை நவஜீவன்ஸ் கைப்பந்தாட்ட மைதானத்தில் வல்வை புளூஸ்சுக்கும் இமையாணன் விளையாட்டுக் கழகத்திற்குமான போட்டி.
இமையாணன் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்டத்திலேயே தலைசிறந்த கோஷ்டி. அதை வெல்வது கடினம். வல்வை புளூசுக்காக திரு.சிவநாதன், திரு.தங்கவேல், கட்டியண்ணா, ஜெயபாலசிங்கம், அருணாச்சலம், செல்லத்துரை மாஸ்ரர் ஆகியோர் விளையாடினார். திரு.தங்கவேல் அடித்த அடி மறக்க முடியாததாகும். பலத்த போட்டியின் பின் இமையாணன் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இமையாணன் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த அப்புக்குட்டி (இவர் யாழ்ப்பாணத்திலேயே சிறந்த ஓவர்கேம் பிளேயர்) தங்கவேலுக்கு கைகொடுக்கும் போது “இந்த அடி அடித்தால் நாங்கள் இனி வெல்ல முடியாது தம்பி” என்று சிரித்துக் கொண்டு சொன்னது இன்றும் நினைவில் உண்டு.
செற்ரப் கேமே பொறுத்த மட்டில் இவர் சிறந்த லிப்ரர். இவரின் திறமையான லிப்ரிங்கோ கட்டிஅண்ணா, தங்கவடிவேல், செல்வச்சந்திரன் ஆகியோரின் சாதனையாகும். நேரத்திற்குத்தக்க, இடத்திற்கு தக்க மாதிரி சோட், ரவல், சோட் என லிப்பரிங்கை அழகாகச் செய்வார். இவர் விளையாடிய போட்டிகளில் லாலா சோப் போட்டி, ஈழநாடு போட்டி, காங்கேசந்துறைப் போட்டி, சாவகச்சேரிப் போட்டி என்பன குறிப்பிடத்தக்கது. பல நாறு செற்ரப் போட்டிகளில் விளையாடியவர்.
இவர் லிப்ரிங்கில் கைதட்டல் பெறுவது கட்டி அண்ணாவும், தங்கவடிவேலும், செல்வச்சந்திரனும். இவருக்கு மிஞ்சுவது சத்தமில்லாத சாதனைகள் தான். உதைபந்தாட்டத்திலும் முன் களத்தில் விளையாடிக் கோல் அடிப்பவர்கள் கைதட்டல் பெறுவார்கள். ஆனால் திரு.தங்கவேல் அவர்கள் புல் பாக்சில் நின்று பெறுவது வெறும் சத்தமில்லாத சாதனைகள் தான். நாட்டில் நிலமை சீரில்லாத காலங்களிலும் மனம் தளராது வல்வை புளூசைக் கட்டிக்காத்து வருவதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருவதை நினைத்து பெருமைப்படுகிறோம்.







