சென்னை : உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதல்வர் நலமாக உள்ளார். அவர் பூரண உடல்நலம் பெறுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு உடல் நலத்துடன் அவர் விரைவில் வீடு திரும்புவார். அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். காவிரி பிரச்னைக்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி தமிழக உரிமையை மீட்டுத் தந்த நிலையில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் டாக்டர் ரிச்சர்டை சந்தித்து பேசினேன். அவரிடம் பேசுகையில், எங்கள் மாநில தலைவருக்காக இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்ததற்காக நன்றி. அதற்காக நாங்கள் நெஞ்சம் நெகிழ்ந்து போய் இருக்கிறோம். தமிழக மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தேன். அவரும் மகிழ்ச்சி தெரிவித்து, அவரது விசிட்டிங் கார்டை எனக்கு தந்தார். அதனால் முதல்வர் முழு உடல் ஆரோக்கியத்துடன் விரைவில் வீடு திரும்புவார். அதிமுக தொண்டர்களின் கவலை விரைவில் தீரும். முதல்வர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்றார்.
கவர்னருடன் சந்திப்பு: வைகோ.இவை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.தொடர்ந்து அவர் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் வித்தியாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு இது கவர்னர் தமக்கு நல்ல நண்பர் என்றும், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் தெரிவித்தார்.