வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுப்பிரிவு ஆண்கள் , பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் நேற்று வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது.
ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தை வீழ்த்தி சம்பியனாகியது உடுப்பிட்டி அ.மி.கல்லூரி.
இவ் இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் வவுனியா சின்னடம்பன் மகா வித்தியாலயமும் மோதின. மூன்று செற்களைக் கொண்ட இப்போட்டியில் 21:15, 21:15 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர்செற்றீல் வென்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது உடுப்பிட்டி .அ.மி கல்லூரி. இதில் மூன்றாமிடத்தை பெற்றது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்.
இதில் 20 வயது பெண்ளுக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் வவுனியா ஸ்ரீசுமணா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 21:19 என்ற புள்ளிகள் அடிப்டையில் ஸ்ரீசுமணா வித்தியாலயம் வெற்றிபெற்றது. தொடர்ந்து தம்மை சுதாகரித்துக் கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அடுத்த இரண்டு செற்களையும் 22:14, 15:8 என்ற புள்ளிகளைப் பெற்று இவ்வருடச் சம்பியனாகியது. இதில் மடு தச்சிணார்மருதமடு மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தை பெற்றது.










