றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் உதைபந்தாட்டத்தை தொடர்ந்து, கரப்பந்தாட்டம் பிரமாண்டமாக மின்னொளியில் நடைபெற்றது. அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் இச் சுற்றுப்போட்டி நடைபெற்றது.
லீக் சுற்றுக்களின் முடிவில் குழு A இருந்து, சைனிங்ஸ் மற்றும் இளங்கதிர் அணிகளும் குழு B யில் இருந்து நேதாஜி மற்றும் தீருவில் அணிகளும் அரையிறுதிக்கு தெரிவாகின. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இளங்கதிர் அணியினை எதிர்த்து நேதாஜி அணி மோதியது. இதில் நேதாஜி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேதாஜி அணியினை சேர்ந்த பிரகதீஸ் சிறந்த விளையாட்டு வீரனாக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் இடம்பெற்ற 2 வது அரையிறுதியில் தீருவில் அணியினை எதிர்த்து சைனிங்ஸ் அணி மோதியது. இதில் தீருவில் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. தீருவில் அணியினைச் சேர்ந்த ம.மயூரன் சிறந்த விளையாட்டு வீரனாக தெரிவு செய்யப்பட்டார். இறுதிப்போட்டி பின்னர் ஓர் நாளில் நடைபெறும்.
இத் தொடரில் இளங்கதிர் மற்றும் சைனிங்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்ற குழு Aயில் இடம்பிடித்திருந்த உதயசூரியன் கழகம், தமது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தாலும் கூட எதிரணிக்கு பலத்த சவாலினை அளித்திருந்து. இளங்கதிர் அணியினருடனான போட்டியில் இறுதி வரை வெற்றியாளரை கணிக்க முடியாத படி பலத்த சவாலினை அளித்ததுடன், சைனிங்ஸ் அணியினருடனான போட்டியில் முதல் பகுதியினை வெற்றிகொண்டதுடன், அடுத்த இரண்டு சுற்றுக்களிலும் பலத்த போராட்டத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















