ஆதிசக்தியின் கால்ப்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டத்துக்கு முன்னேறின கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் வி.கழகமும் பலாலி விண்மீன் வி.கழகமும்


வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் மறைந்த கழக வீரர்கள் நினைவாக நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர் குறித்த சிதம்பரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
அதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகமும் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதின. மிகவும் விறு விறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தின் முதல் பாதியாட்டத்தின் 2 ஆவது நிமிடத்தில் டயமன் அணி முதல் கோலை பதிவு செய்ய 12 ஆவது நிமிடத்தில் பதில் கோல் போட்டு ஆட்டத்தை சமனிலைப்படுத்தியது றேஞ்சர்ஸ் அணி.தொடர்ந்த ஆடட்டத்தில் இரு அணியினரும் மேலதிக கோல் போடாத நிலையில் 1:1 என்ற அடிப்படையில் ஆட்டம் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. இடைவேளையின் பின் இரு அணியினரும் தலா ஒவ்வொரு கோல் போட 2:2 என சமனிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்
அடுத்து இடம் பெற்ற ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. அபாரமாக செயற்பட்ட விண்மீன் அணி 4:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.








