இந்திய- தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே காந்தி- மண்டேலா பெயரில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் என்று தென்ஆப்ரிக்க கிரிக்கெட் சங்க தலைமை செயல் அதிகாரி ஹாருன் லோர்கத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆஷஷ் தொடர் போல இந்தியா- தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே காந்தி -மண்டேலா பெயரில் கிரிக்கெட் தொடர் உருவாக்க முடிவு செய்யப்பட்டு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. வரும் 2017ஆம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டி கொண்ட முதல் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் அடுத்த தொடர்ல நடைபெறும் . இந்த தொடரை கிரிக்கெட் உலகின் நட்சத்திர தொடராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தற்போது டெஸ்ட் தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணிதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்ஆப்ரிக்க அணி இந்தியாவுக்கு வந்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.