தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இளைஞர் கழகங்களிடையே 2015 ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-06-2015) எல்லே போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் அரையிறுதியில் வீனஸ் அணியுடன் மோதிய வல்வை அணி, ஆக்ரோசமாக பந்துகளை மைதானத்துக்கு வெளியே வல்வை வீரர்கள் அனுப்ப, 30 பந்துகளில் 10 புள்ளிகளை அதிரடியாக குவித்தனர். வல்வை அணி சார்பாக பிரகதீஸ்வரன் மற்றும் மணிமாறன் தலா மூன்று புள்ளிகளையும், ஜெகன் இரண்டு புள்ளிகளைபயும், பிரணவன் மற்றும் மதன் தலா ஒவ்வொரு பள்ளியையும் தமது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு 30 பந்துகளில் 11 புள்ளிகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வீனஸ் அணியினர், வல்வை அணியினரால் களத்தடுப்பில் விடப்பட்ட தொய்வு நிலையைப் பயன்படுத்தி முதல் 06 பந்துகளில் 04 புள்ளிகளை பெற்று மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றனர். போட்டியின் நிலை மாறுவதை உணர்ந்த வல்வை அணியினர், உடனடியாக சுதாகரித்து தமது மிகச் சிறப்பான களத்தடுப்பினால் எதிரணியினர்க்கு மேலும் புள்ளிகள் வழங்கும் சந்தர்ப்பத்தை வழங்காமல், 04 புள்ளிகளுடனேயே ஆட்டமிழக்க செய்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் பலமான ஹாட்லியன்ஸ் அணியை எதிர் கொண்ட வல்வை அணியை, துடுப்பாட்ட வீரர்கள் கைவிட 30 பந்துகளில் 01 புள்ளியை மட்டுமே பெற முடிந்தது. பதிலுக்க 30 பந்துகளில் 02 புள்ளிகளை பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் ஆடிய ஹாட்லியன்ஸ் அணி 02 புள்ளிகளை பெற்று சம்பியனானது. வல்வை அணி 2ம் இடத்தினை பெற்றது.









