வீதிகளில் தேவையற்ற விதத்தில் நிற்கும் இளைஞர்கள் மற்றும் வேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றின் சாரதிகள் மீது சட்டம் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் மண்டபத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் பாதுகாப்பு குழுவினரால் பாடசாலைகள் முடிவடையும் நேரங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்றன வேகமாக பயணிப்பதோடு, பாடசாலை மாணவிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்படி வல்வெட்டித்துறை பொலீஸார் இது தொடர்பாக கவனமெடுத்து, தேவையற்ற விதத்தில் வீதிகளில் தரித்து குழுக்களாக இருக்கும் இளைஞர்கள், இரவு நேரங்களில் வீதிகளில் ஒன்றுகூடும் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கு இடையூறு செய்வோர் போன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் W.P.J.சேனதீப தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட 23 கிராம அலுவலகர் பிரிவின் கிராம அலுவலகர்கள், சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.








