பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்து இன்று காலை கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகியது தமிழர்களின் அகிம்சை வழிப்போராட்டம். தமிழருக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடாவடிகளைக் கண்டித்து அம்பாறை பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான அகிம்சைப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று ஆரம்பமான இப்பேரணி 6 ஆம் திகதி பருத்தித்துறை பொலிகண்டியை வந்தடையும். மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னே வர பெருமளவான மக்கள் அணிவகுத்து வருகின்றனர். முக்கிய நகரப்பகுதிகளில் நடைபவனியாக வரும் பேரணி ஏனைய பகுதிகளில் வாகனத் தொடரணியாக வந்து பொலிகண்டியை 6ஆம் திகதி அடையும். இதே வேளை இன்று காலை பொத்துவில் பகுதியில் பெருமளவான இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றதுடன் நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி பேரணியை குழப்ப முற்பட்டுள்ளனர். இவர்களுடைய தடையும் மீறி பொத்துவிலிலில் இருந்து பேரணி நகர்ந்து வருகின்றது.















