வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தும் அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று மாலை 04:00 தீருவில் வி.க மைதானத்தில் நடைபெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் நேதாஜி எதிர் சைனிங்ஸ் அணிகள் மோதின. போட்டி ஆரம்பத்தில் இருந்து இரு அணிகளும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 00:00 என்ற கோல்கணக்கில் முடிவுக்கு வந்தது முற்பாதி ஆட்டம்.
இடைவேளையின் பின் இரண்டாம் பாதியாட்டத்தில் சைனிங்ஸ் அணியினர் தொடர்ச்சியாக மூன்று கோல்களை போட்டனர். இருந்தாலும் நேதாஜி அணியினர் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போட்டியின் இறுதி 10 நிமிடங்களுக்குள் தொடர்ச்சியாக மூன்று கோல்களை போட , மேலதிக எவ்வித கோல்களுமின்றி 03:03 சமநிலையில் முடிவுற்றது.
வெற்றியை தீர்மானிப்பதற்காக நடுவரினால் சமநிலை தவிர்ப்பு உதைவழங்கப்பட்டது. சமநிலை தவிர்ப்புதையில் 05 : 03 என்ற கோல்கணக்கில் சைனிங்ஸ் அணி சம்பியனாகியது.
இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேதாஜி அணி 2ம் இடத்தைப்பெற்றுக் கொண்டது.
3ம் இடத்தை தீருவில் அணி பெற்றுக்கொண்டது.











