ஐ.பி.சி மேடையில் புலம் பெயர் கலைஞர்களை ஒன்றிணைத்த வல்வை வஸந்த்
சுவிற்சலாந்து நாட்டில் கடந்த 28.02.2016 சனிக்கிழமை நடைபெற்ற ஐ.பி.சி உலகளாவிய சேவையை விரிவாக்கும் பிரமாண்டமான நிகழ்வில் வல்வை கலைஞர்களும் தமது முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.
டென்மார்க்கில் வாழும் வஸந்த் செல்லத்துரை, மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிஸ் நாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் இளம் புலம் பெயர் தமிழ்க்கலைஞர்களை இணைத்து புதுமை இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள்.
இந்த இசை நிகழ்வில் நமது கலைஞர்களே இயற்றி இசையமைத்த பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்பது திட்டமாகும்.
அந்த வகையில் தமிழ்ப்பாடல்கள், தமிழ் றப் இசை, ஆங்கிலப் பாடல்கள், வாத்திய இசை, மெல்லிசைப்பாடல், அவற்றை தனியே இணைக்கும் ஒரு கதைத் தொடர், நகைச்சுவை, நடனம் போன்றன இணைத்து உருவாக்கப்பட்ட கதைக்கதம்ப நிகழ்வு.
வஸந்த் இந்த நிகழ்ச்சிக்கான கதை கூறியதுடன் பாடல்கள் சிலதையும் பாடினார், இத்துடன் இன்று சமூக வலைத்தளங்கள் வழியாக பிரபலம் பெற்றுவிட்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த புலம் பெயர் இளம் கலைஞர்களை ஒன்றிணைத்து நிகழ்வை முன்னெடுத்தார்.
வல்வையை பின்னணியாகக் கொண்ட அர்ச்சனா ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடி, உரையாடி நடித்தார், சுவிற்சலாந்தை சேர்ந்த கிளியோபாற்றா தான் இசையமைத்த பாடலை தனது பாணியில் முன்வைத்து நடனமாடிப் பாடினார்.
சமீபத்தில் காணொளியாக வெளியாகிய இருதயத்தின் பார்வைக்குள்ளே என்ற பாடலை சுவிற்சலாந்து ஆர்ஜித்தும் ஜமீராவும் பாடினார்கள், ஜேர்மனியில் இருந்து பிரபல வாத்தியக் கலைஞரான சி.ஜே வயலின் மூலம் சபையை கவர்ந்தார், ஐரோப்பாவில் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற எம்.சி.சாய் தனது பாணியில் றப் பாடலைப் பாடி அவையை உற்சாகமாக வைத்திருந்தார்.
புலம் பெயர் இளையோரின் இன்றைய கலைப் பயணத்தை எடுத்தியம்பிய நிகழ்வாக இது அமைந்திருந்தது..


















