சிறைச்சாலை மேலாண்மை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில், குறித்த கடித்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக தனது பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை நிர்வாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவுக்கு முன்னதாக அறிவித்திருந்தார்.
தற்போது இத்தாலியில் இருக்கும் பிரதமர், ரத்வத்தையுடன் இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரை பதவி விலகுமாறு அறிவித்ததாகவும் அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம், ரத்வத்த மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








