வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறுகியகால ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களினால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சிப் பேரணி 03.02.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு 07.02.2021 நேற்றைய தினம் வடமராட்சி மண்ணின் பொலிகண்டியில் எழுச்சியுடன் நிறைவு பெற்றது.
அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகள் என பலரும் ஒத்துழைப்பு வழங்கினர். தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர். எனினும் திட்டமிட்டபடி கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் கொட்டும் மழையில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அடக்கப்படும் இனங்களின் போராட்டங்கள் என்றுமே ஓயாது என்பதை இது உணர்த்தியுள்ளது.
இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள் முன்னின்று பேரணியை நடத்தினர்.பொலிஸாரின் தடைகளும் சில விசமிகளின் கல்லெறி, ஆணிகளைத் தூவி வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்ட போதும் மக்கள் எழுச்சியால் அவை பயனற்றுப் போய்விட்டன.மேலும் குறுகிய நாள் அழைப்பில் மக்கள் தமது பேராதரவை வழங்கி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமது வாழ்வுரிமையை ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று மாலை 06.40 மணியளவில் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் இப் போராட்டம் நிறைவுற்றது. அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக் கல் பதிக்கப்பட்டு இறுதிப்பிரகடனம் வாசிக்கப்பட்டது.
புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்













































































































