குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு

0
540 views

யாழ்ப்பாணத்தில் பணியில் உள்ள பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு செய்வதாக பொலிசார் இணங்கியதோடு வரி அனுமதிப்பத்திரம் காட்சிப் படுத்த தவறியிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமும் அல்ல என இணக்கம காணப்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வீதிக் கடமையில் உள்ள பொலிசார் வீதிப்போக்குவரத்தின் போது குற்றமிழைத்ததாக தெரிவித்து வழங்கப்படும் பத்திரமானது தனியே சிங்களத்தில் மட்டுமே உள்ளதனால் இந்த விடயம் அரசியல் யாப்பின் 22ன் கீழாக 1வது சரத்தை மீறுகின்ற செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாட்டினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதிர்காமநாயகம் , சி.தவராசா ஆகிய இருவருமே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டுகளில் சி.தவராசா இது தொடர்பில் கடந்த 30ம் திகதி வாகனத்தில் சென்ற சமயம் சட்டத்தை மீறியதாக கோப்பாய் பொலிசார் வழி மறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக்கொண்டு தனியே சிங்களத்தில் எழுதிய துண்டினை வழங்கினர். இது அரசியல் யாப்பினை மீறும் செயல்.

எனவே இது தொடர்பில் கடந்த 6ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன். இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வகையில் வியாழக் கிழமை விசாரணைக்காக மனித உரிமை ஆணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதேபோல் மற்றுமொருவர் தனது வரி ஆவணத்தை காட்சிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டப்பட்டு சிங்களத்தில் ஆவணம் வழங்கப்பட்டிருந்தது.

இவை இரண்டும் ஒரே அடிப்படையானவை என்பதன் பெயரில் ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தார். இதன்போது வரி ஆவணம் பகிரங்கமாக காட்சிப்படுத்தாமை தண்டனைக்குரிய குற்றம் அல்ல எனவும். சிங்கள மொழி மட்டுமே தெரிந்த பொலிசார் என்பதனாலேயே ஆவணங்கள் சிங்களத்தில் வழங்குவதாகவும் பொலிசாரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒருவர் பணியில் இணைந்து அடுத்த பதவிக்கு உயர்வு பெற முன்னர் இரண்டாம் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதனை வலியுறுத்தினேன். இந்த நிலையில் குறித்த விடயம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here