ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கொரோனாத் தொற்றுக் காரணமாக இம்முறை கூட்டத்தொடரில் காணொளி மூலம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கை தொடர்பான உண்மை நிலைமையை இதன்போது அறிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் தனியாக கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து வேறொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தோடு எம்.கே. சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் கையொப்பமிட்ட இன்னுமொரு கடிதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது








