ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன.
முரண்படும் தமிழ்த் தலைமைகள்
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்ற வேளையில் எம்.கே. சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் கையொப்பமிட்ட கடிதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
ஜெனிவா போன்ற பொதுவான விடயங்களிலேயே இணக்கப்பாட்டுக்கு வரடியாத தமிழ்க் கட்சிகள் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொதுவான இணக்கப்பாட்டுடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால், அது அதிகளவுக்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பது உண்மை.










