இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் திட்டம் என்ன?
இலங்கைக்குப் பல்லாயிரக் கணக்கில் கடன் வழங்கியிருக்கிறது சீனா. இந்தக் கடனைக் கட்ட முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது.தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்கும் கடன் சுமையால், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புதல், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்காக இலங்கை அரசுக்கு 6,150 கோடி இலங்கை ரூபாயைக் கடனாக அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சீனா.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும் எனவும் கூறுகின்றார்கள்.
சீனாவின் திட்டமே திருப்பியளிக்க முடியாத அளவுக்கான கடனை அளித்து, இலங்கையில் அதிகாரம் செலுத்த வேண்டுமென்பதுதான். அப்படிச் செலுத்தும் பட்சத்தில், ஆசிய நாடுகளுடன் சாலை, கடல்வழி போக்குவரத்துகளை அதிகரிக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப் பன்மடங்கு பெருக்கலாம். பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இதுபோலவே அதிக அளவில் முதலீடுகளைச் செய்துவருகிறது சீனா.
இலங்கை அரசு என்ன கூறுகிறது?
“குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டிருந்தன.இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு அதிவேக வீதி, கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகர் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகவே சீனாவிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது. குறிப்பாக சீனாவிடமிருந்து 10 பில்லியன் யுவானை (சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன பணம்) பெற்றுக்கொண்டுள்ளதாக மே மாத இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே தாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வருடாந்தம் சுமார் 8 பில்லியன் ரூபா வரை இடைவெளியொன்று காணப்படுகின்றமையினால், இந்த காலப் பகுதியில் அதனை ஈடு செய்துக்கொள்வதற்காக இறக்குமதி இயலுமான வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.
சுற்றுலா துறை, வெளிநாடு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே அதனை இதுவரை காலமும் ஈடு செய்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த மூன்று விதமான வருமானங்களும், கொவிட் நிலைமைக்கு மத்தியில் இன்று பூஜ்ஜியமாகியுள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இயலுமான வரை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் ஈடு செய்துக்கொள்ள முடியாதமையினாலேயே கடன் பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.”








