கண்டறியப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் கண்டறியப்படாத தீர்வுகளும்

0
438 views

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு செய்யாது இழுத்தடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தில் வடக்கில் 8 பிரதேச சபைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டினையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் ஓர் குழு அமைத்து வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் வடக்கின் 4 உள்ளூராட்சி சபைகளில் ஊழல் அல்லது மோசடி இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டு அது தொடர்பில் திணைக்கள ரீதியிலான ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் மோசடி இடம்பெற்றதாக கண்டறியப்பட்டது.

இவ்வாறு இனம் கானப்பட்ட 8 சபைகளான வல்வெட்டித்துறை நகர சபை , பருத்தித்துறை நகர மற்றும் பிரதேச சபைகள் ,காரைநகர் பிரதேச சபை , பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, வவுனியா பிரதேச சபை உள்ளிட்ட 8 சபைகளின் 2017ஆம் ஆண்டு யூன் மாதம் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவை யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை , கிளிநொச்சி , வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் பாரப்படுத்தப்பட்டிருந்த்து.

இவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு அவற்றிற்கான குற்றப் பத்திரங்கள் தயார் செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சபைகள் தொடர்பில் பொலிசார் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் இன்றுவரையில் எந்தப் பொலிசாரினாலும் எந்தவொரு சபை தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

நெல்சிப் திட்டத்தின் ஊடாக குறித்த சபைகளில் பல மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டினையடுத்தே விசாரணைகள் ஆரம்பித்தபோதும் இன்றுவரை எவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here