டெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல் கிணறு தோண்டும் போது கண்டு பிடிக்கப்பட்டது. 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள்,ராக்கெட் லாஞ்சர்,கண்ணிவெடிகள் என தோண்டத்தோண்ட ஆயதங்கள் வருவதால் பரபரப்பு, காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆயுதங்கள் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்,தங்கச்சிமடம்,தண்ணீர் ஊற்று,பனைக்குளம்,ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இந்தியா ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.
கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.
அந்த பயிற்சியின் போது தொலைவில் இருப்பவர்களை குறிபார்த்து சூடும் பயிற்சி,கண்ணிவெடிகளை பயன்படுத்துவது,ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது,கையெறி குண்டுகளை பயன்படுத்துவது,கடலில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோ்ந்த தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அந்த கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதி நவின துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் பகுதியில் கிணறு தோண்டும் போது பெட்டிகள் இருப்பதை அவதானித்த மக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை கண்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்த போது ஆயத குவியல் இருப்பது தெரியவந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனாவுக்கு தகவல் தெரிவித்தனர். வெடி குண்டுகளை செயல் இழக்கும் தனிப்படையும் வவைழைக்கப்பட்டது. காவல்துறையினர் குழியை பாதுகாப்புடன் தோண்ட தொடங்கினர்.
நேற்று இரவு 09 மணி வரையில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாங்கள்,400 ராக்கெட் லாஞ்சர்கள்,15 பாக்ஸ் கையெறி குண்டுகள்,5 கண்ணி வெடிகள்,கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் 4 பெட்டிகள்,எடுக்கப்பட்டது.
வெடிகுண்டுகள் எடுப்பதால் அந்த பகுதயில் உள்ள பொதுமக்களை காவல்துறையினர் அப்புறபடுத்தி பாதுகாப்புடன் ஆயுதங்களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதிலும் இது போன்று வேறு இடங்களிலும் ஆயுத குவியல் உள்ளதா என ஆய்வு செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் ஆயத குவியல் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







