வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புகின்ற இலங்கையர்கள் மற்றும் இலங்கை வரும் சுற்றுலாபயணிகள் பின்பற்ற வேண்டிய மறுசீரமைக்கப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் சில வௌியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வரும் பயணிகள், நாட்டிற்கு வந்து பிசிஆர் பரிசோதனைக்குட்பட்டு 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்று வீட்டிற்கு செல்லலாம். பி.சி.ஆர் சோதனையின் முடிவு கிடைக்கும் வரை பயணிகள் தனிமைப்படுத்தல் மையம் அல்லது தனிமைப்படுத்தல் ஹோட்டலில் தங்க வேண்டும். பின்னர் பயணிகள் வீட்டிற்கு பயணிக்க முடியும், ஆனால் அந்த பகுதி சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இருப்பினும், பயணிகள் இலங்கைக்கு வந்த பின்னர் 7ஆம் நாளில் மீண்டும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி போடப்படாத பயணிகளை ஏழு நாட்களுக்கு ஒரு தனிமைப்படுத்தல் மையம் அல்லது தனிமைப்படுத்தல் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும். பயணிகள் மீது முதல் மற்றும் ஏழாம் நாளில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் அவர் 7ஆம் நாளில் வெளியேறலாம். இருப்பினும் தடுப்பூசி போடாத பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலின் மீதமுள்ள ஏழு நாட்களை, சுகாதார அலுவலரின் மேற்பார்வையில் முடிக்க வேண்டும்.








