யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றின் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த நபரை வழிமறித்த கும்பல், அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கான நபர் கோண்டாவிலைச் சேர்ந்த 43 வயதுடைய பாலச்சந்திரன் மதனகரன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.








