மதுபான நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோதமான மது விற்பனை அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த 20ஆம்திகதி தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெற்றது.மதுபான நிலையங்களில் மதுப்பிரியர்கள் அலைமோதியதை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து மறுதினமே மதுபான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன.
இதனை தமககு சாதமாக பயன்படுத்திய சில மதுபான நிலையங்களின் உரிமையாளர்கள் தமது விசேட பிரதிநிதிகள் மூலம் கறுப்பு சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் இவ் விற்பனை தாராளமாக இடம்பெற்று வருகின்ற போதும் மதுவரித் திணைக்ககளத்தினர் எவ்விதமான நவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக 1500 ரூபா முதல் 2000ரூபா வரை சாதாரணமாக விற்க வேண்டிய சாராய வகைகள் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ரூபா வரையிலும் பியர் வகைகள் அறுநூறு ரூபாமுதல் எழுநூறு ரூபா வரை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தபோதும் தற்போது அதி உச்சக்கட்டமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








