கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகளே போராடி வருகின்றன. பல நாடுகளில் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை 9 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையானது கொரோனாவை தடுக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பட்டியல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 244 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஏனைய மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக இடைக்கிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.








