இலங்கை துறைமுகங்களில் இருந்து இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், சிறிலங்கா துறைமுக அதிகார சபை ஆர்வம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது..
“காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதுபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
பயணிகள் கப்பல் சேவையின் மூலம் சுற்றுலாத் துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்துக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகாமையில் வாழும் சமூகங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அத்துடன் சீமெந்து போன்ற மொத்த பொருட்களை நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து மூலம் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவைக் குறைக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.








