நேதாஜி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் இறுதி நேர கோல்களின் மூலம் வெற்றி பெற்றது ரேவடி அணி.
இளங்கதிர் அணியினை, 1:1 என சமநிலைப்படுத்தி, தண்ட உதையில் 3:2 என வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தது உதயசூரியன் அணி.
ரேவடி அணியுடனான அரையிறுதி நேற்றைய தினம் தீருவில் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணியினரும் பலமாக மோதிக்கொண்ட போதும் இரு அணியினராலும் முதற்பாதியில் கோல்களை போட முடியவில்லை. பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதியிலும் இதுவே தொடர்ந்தது. இரு அணியினதும் பல முயற்சிகள் எதிரணி பின்கள வீரர்களாலும், கோல் காப்பாளராலும் முறியடிக்கப்பட்டது.
ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்களே இருந்த நிலையில் ரேவடி அணி முதல் கோலினை போட்டு 1:0 என போட்டியில் முன்நிலை பெற்றனர். சுதாகரித்த உதயசூரியன் அணியினர், அனைத்து வீரர்களையும் முன்களத்திற்கு நகர்த்தி ஆட்டத்தை வேகப்படுத்தினர். மைதானத்தின் மத்தியில் இருந்து உதயசூரியன் வீரன் நவீன் அவர்கள் ரேவடி அணியின் கோல் கம்பத்தினை நோக்கி மிகச்சிறப்பாக உதைத்த பந்தினை, ரேவடி அணியின் கோல் காப்பாளர் தடுத்திருந்தார்.
உதயசூரியனின் அனைத்து வீரர்களும் முன்களத்தில் நங்கூரமிட, கிடைத்த இடைவெளி மூலம் ரேவடி அணியினர் இரண்டாவது கோலினையும் போட்டு 2:0 என முன்னிலையாகினர். போட்டி முடிவடைந்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
கடந்த தொடர்கள் வரை எந்த வித போராட்டமும் இன்றி தோல்வியடைந்து வந்த உதயசூரியன் அணி, இன்று மூத்த வீரர்களினால் வழங்கப்படும் பயிற்சிகள் மூலம், பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்தும் அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது பாராட்டத்தக்கது.
போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.









