வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுசன நூலகம் புதிய இடத்தில்
வல்வெட்டித்துறை சந்தியிலமைந்துள்ள நவீனசந்தை கட்டடத்தொகுதியின் மேல்மாடியில் இதுவரைகாலமும் இயங்கிவந்த நகராட்சி மன்றத்தின் பொதுசன நூலகம் இன்று (01.02.2019) முதல் “புஸ்பவாசா” காங்கேசன்துறை வீதி, வல்வெட்டித்துறை எனும் முகவரியிலமைந்துள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி மன்ற கௌரவ தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்களினால் இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு புதிய இடத்தில் பொதுசன நூலகம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பொதுமக்களின் நன்மை கருதி குறிப்பாக முதியவர்களினதும் மாணவர்களினதும் நலனை கருத்தில்கொண்டு, நகரின் மத்தியில் மேல்மாடியில் இதுவரை காலமும் இயங்கிவந்த நூலகம் தற்போது அமைதியான சூழலில் கீழ்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன நூலகமாக இதனை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொதுசன நூலகத்திற்கு ஏற்ற வகையில் காணியொன்றை கொள்வனவு செய்து நிரந்தர கட்டடமொன்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் பொருத்தமான காணி கிடைக்கப்பெறாமையினால் நூல்நிலையத்திற்கான நிரந்தர கட்டடம் இதுவரைகாலமும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. புதிய இடத்தில் அமையப்பெற்றுள்ள இந்நூலகத்தை பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்தி நன்மையடைவதுடன் அவர்கள் தமக்கு தேவையான புத்தகங்களின் விபரங்களை நூலகரிடம் பதிவு செய்தால் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நகராட்சி மன்ற தவிசாளர் அறியத்தந்துள்ளார்












