பட்டதாரி நேர்முகத் தேர்வின் சான்றிதழை உறுதி செய்வதற்கு வடமராட்சிப் பகுதியில் 2 ஆயிரம் ரூபா கோரிய கிராம சேவகர் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பட்டதாரிகளிற்கான நேர்முகத் தேர்வு இடம்பெறும் நிலையில் அதற்கான சான்றிதழ்களை உறுதிப்படுத்துவதற்காக பட்டதாரிகள் கிராம சேவகர்களை நாடிச் செல்கின்றனர். இதற்காக பல கிராம சேவகர்கள் நேரம் , இடம் பார்க்காது சேவையாற்றும் நிலையில் ஒரு சில கிராம சேவகர்களை தேடி அலையும் நிலமையும் உள்ளது.
இதில் வடமராட்சிப் பகுதியில் சான்றிதழை உறுதிப்படுத்தச் சென்ற ஓர் பெண் பட்டதாரியிடம் கிராமசேவகர் 2 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் குறித்த பட்டதாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் குறித்த பிரதேச செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ,குறித்த கிராம சேவகர் தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.இதனால் கிராம சேவகரை அப் பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றதோடு ஆரம்ப விசாரணைகளும் இடம்பெறும் எனப் பதிலளித்தார்.








