அநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 8 அரசியல் கைதிகளில் 6 பேர் புனர்வாழ்விற்கு மாற்ற இணக்கம் அதே போன்று எஞ்சி 42 வழக்கு இடம்பெற்று வரும் அரசியல் கைதிகளிற்கும் அடுத்து வரும் வழக்குத் தவணைகளில் புனர்வாழ்விற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என நேற்றைய சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கும் இடையில் நேற்றைய தினம் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
தற்போது நாட்டின் பல சிறைகளிலும் உள்ள 107 அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பிலும் கடந்தவாரம் பிரதமர் தலைமையில் பேசியதன் பிரகாரம் இன்று ( நேற்று ) நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் சகல அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசப்பட்டது. நேற்று இடம்பெற்ற ஓர் வழக்கிலும் நான்கு பேருக்கு தீர்ப்பளிக்கப்பட்டதன் பிரகாரம் தற்போது நாட்டில் 55 அரசியல் கைதிகள் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்த 55 பேரின் விடுதலைக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ள நிலையில் அது தொடர்பில் நாளை ( இன்று ) ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பில் கோரப்படும்.
எஞ்சிய 52 கைதிகள் தொடர்பில் தனித்தனியாக ஆராயப்பட்டது. இதில் அநுராதபுரம் சிறையில் தற்போது உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 8 அரசியல் கைதிகளில் 2 பேர் உடனடியாக புனர்வாழ்வு முகாமிற்கு மாற்றப்படுவார். அதேபோல் மற்னறுமொருவரின் வழக்கு இந்த வாரம் இடம்பெறவுள்ளது. அதன்போது அவரும் புனர்வாழ்விற்கு மாற்றப்படுவார். இதேநேரம் எஞ்சிய ஐவரில் மூவரிற்கு அடுத்த தவணை வழக்கு நீதி மன்றிற்கு வரும்போது அவர் அங்கே அதனை கோரும்போது அவர்களும் புனர்வாழ்விற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இருப்பினும் எஞ்சிய இருவரும் தமக்கு வழக்கு விசாரணையே வேண்டும் அது வவுனியாவில் இடம்பெற வேண்டும் எனக் கோரியதற்கு அமைய அவர்களின் வழக்கு வவுனியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எஞ்சிய 44 அரசியல் கைதிகளிற்கும் அவர்களின் அடுத்த தவணை வழக்குகளுடன் நீதிமன்றம் ஊடாக அவர்களும் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இதன் மூலம் 50 அரசியல் கைதிகளின் பிரச்சணைக்கும் தீர்வு கிட்டும் என வாக்குறுதி வழங்கப்பட்டது என்றார்.







