மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் ஆறு யாழ் வீராங்கனைகள்…

0
590 views

15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் ஆறு யாழ் வீராங்கனைகள்…

பூட்டான் தலைநகர் திம்புவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (SAFF), 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில்இ யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரில் தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு நாடுகள் ஏ (A) மற்றும் பி (B) என இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியிடுகின்றன. இதில் ஏ குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணி, தங்களுடைய குழுவில் (A) இந்திய மற்றும் பூட்டான் அணிகளுடன் மோதவுள்ளது.

போட்டித் தொடருக்காக எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள இலங்கை அணி, தங்களுடைய முதல் குழுநிலைப் போட்டியில், 9ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. பின்னர், 11ஆம் திகதி பூட்டான் அணியை எதிர்த்தாடவுள்ளது. இந்த நிலையில் தொடருக்கு செல்லவுள்ள 23 பேர்கொண்ட குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை இன்று (06) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகளும், யாழப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் மூன்று மாணவிகளும் என மொத்தமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் அணிக்குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் அணியின் தலைவியாக குருணாகல் கவிஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பின்கள வீராங்கனை உத்பல கவிந்தி ஜெயகொடி நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக பொலன்னருவை பெந்திவெவா மகா வித்தியாலயத்தின் பின்கள வீராங்கனை நிமேஷா எஸ். பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடருக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஏற்கனவே இலங்கை 16 வயதின் கீழ் ஆண்கள் தேசிய அணியை பயிற்றுவித்த அனுபவம் கொண்ட அப்காஸ்கான் மொஹமட் அஜவத் அவர்களும், கோல் காப்பு பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய அணியின் முன்னாள் கோல் காப்பாளரும், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளருமான மஹிந்த கலகெதர அவர்களும் படமையாற்றுகின்றனர்.

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோர் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 1-0 என வீழ்த்தி பங்களாதேஷ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது. எனினும், குறித்த தொடரில் இலங்கை அணி பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி குழாம்
உத்பல கவிந்தி ஜெயகொடி (தலைவி), அனுருத்திகா டில்ருக்ஷி, ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா, பாஸ்கரன் செயந்தினி, எஸ்.தேவப்பிரியா, யு.ஜோகிதா, ஜெகநாதன் ஜெதுன்சிகா, இந்துனி நிமேஷரா குமாரி, காவ்யா நெத்மி குணரத்ன, அமவி அனுத்தரா கஹடபிடிய, மலீகா சேஹானி, சந்துனி நிசன்சலா குமரிஹாமி, கவிஷா மாலிந்தி, நிமேஷா எஸ். பண்டார (உப தலைவி), சென்கலனி பண்டார, பசிந்து மதுபாஷினி திசாநாயக்க, அமானி எம். சேனாதீர, தஷானி ஜயகடு, மதுஷானி குமாரி, டபுள்யூ.ஏ.ஐ.வீரஷதீர, கீத்மா செனூரி பண்டார, தசுனி ஹன்சிகா

வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here