டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார்.
இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.
அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார்.
உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.








