மன்னார் மாவட்டம் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் அவர்களினால் மேலும் 24 மணி நேரம் மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரிய கடை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இரு கிராமங்களும், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை திங்கட்கிழமை மாலை 6 மணி வரை முடக்க நிலையில் இருக்கும்.








