வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.
இதன்போது 49 அலுவலக இரயில்களை வழமையான கால அட்டணையின் கீழ் சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உரிய நேரத்தில் இரவு நேர தபால் ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், முதலாவது ரயிலான உத்தரதேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து அதிகாலை 5.30 க்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது. யாழ்தேவி ரயில் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
மேலும் இரவு நேர தபால் புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
அத்துடன் அதிகாலை 3.45க்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஶ்ரீதேவி ரயிலும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழமையான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் அதேவேளை, சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.








