பிரான்ஸ் சூப்பர்ஸ்டார் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த இளம் வீரராக பிரான்ஸ் முன் கள வீரரான 19 வயது கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பை போட்டியில், கிலியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 கோல்களையும் அடித்தார். தற்போது, பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடிவரும் கிலியன், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் சம்பளமாகக் கிடைக்கும். அதன்படி, 7 ஆட்டங்கள் மூலம் கிலியனுக்கு சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது. இந்தத் தொகையை நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்த முடிவுசெய்த எம்பாப்பே குழந்தைகள் நலனுக்கு செலவிட முடிவுசெய்தார். தற்போது, உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் நெய்மருக்கு அடுத்தபடியாக இவர்தான் உள்ளார். சமீபத்தில் மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பேவை பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 135 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்செய்தது. ரியல்மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகி யுவான்டஸ் அணியில் இணைந்ததால், ரொனால்டோ இடத்தில் எம்பாப்பேவை கொண்டுவர மாட்ரிட் அணி முயன்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்தான், தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார்.









