ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் வருகையையின் போது தமது சொந்த இடங்களில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான நீதியான விசாரணை என்பவற்றை வலியுறுத்தி நேற்று இரு வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திரந்த ஜ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழவினரையும் தனித்தனியாக சந்தித்த பின்னர் பின்கதவால் வெளியேறிச் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பான்கிமூன் முதலில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்திப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. அதற்கமைய அவர் ஆளுநரின் அலுவலகம் நோக்கி சென்ற சமயத்தில் ஆளுநர் அலுவலகம் முன்னால் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததது. இதனால் மாவட்டச் செயலகத்திற்கு எதிராக அமைந்தள்ள ஆளுநரின் அலுவலகத்தினுடைய பிரதான வாயிலினூடாக செல்வதை தவிர்த்த பான்கிமூன் பழைய பூங்காவீதி ஊடாக ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்லும் பிறிதொரு வாயிலினூடாக சென்றிருந்தார்.
அதேநேரம் யாழ்.பொதுநூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரைச் சந்திப்பதற்கு வருகை தந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் நூலகத்தின் பிரதான வாயிலினூடாகவே உட்பிரவேசித்தார். எனினும் சந்திப்புக்கள் நிறைவடைந்ததன் பின்னரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பிரதானவாயிலை அண்மித்து கோஷம் எழுப்பியவாறு இருந்ததன் காரணத்தால் பிரதான வாயிலூடாக வெளியேறுவதைத் தவிர்த்த ஐ.நா செயலாளர் நாயகம் பின்வாயிலால் வெளியேறிச் சென்றார்.















