இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமானங்களில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் நவம்பர் 15 முதல் இந்தியாவுக்கு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க இந்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் விமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசா அனுமதியையும் இந்தியா ரத்து செய்தது. மேலும், தொற்றுநோய் பலவலைத் தடுக்க சர்வதேச பயணங்களும் தடை செய்யப்பட்டன.
விசா ரத்தானதால், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அரசாங்கம் விசா வழங்கியது, ஆனால் சுற்றுலா விசா வழங்கலுக்கான தடையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், பல மாநில அரசுகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சுற்றுலா துறையின் பிரதிநிதிகளுடன் விவாதித்த பிறகு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.








