இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன.
இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தெரிவிக்கையில்,
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7N இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.
இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன்
தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது








