கடந்த சில வருடங்களுக்கு முன் வரை பல இறுதிப்போட்டிகள், அரையிறுதிப்போட்டிகள் என தனது தடங்களை பதித்தவண்ணம் இருந்த வல்வை அணி, வடமராச்சி மண்ணில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஓர் பலமான அணியாக காணப்பட்டது. அதன் பிறகு அணியின் பல நட்சத்திர வீரர்களின் விலகளுடன் (தொழில் நிமிர்த்த வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உபாதைகள்) பாரிய பின்னடைவை சந்தித்திருந்து. குறிப்பாக இக் காலப்பகுதிகளில் அணி இரண்டாம், மூன்றாம் சுற்றுக்களுக்கு தகுதி பெறுவது என்பதே ஓர் கேழ்விக்குறிய விடயமாக காணப்பட்டது. காரணம் அக்காலப்பகுதிகளில் அணியில் ஒரு சில மூத்த வீரர்களே ஆடிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் அணியில் குறைந்த பட்சம் 3க்கு மேற்பட்ட மாற்றங்களாவது காணப்படும். இக்காலப்பகுதியில் அணித்தலைவர்களாக இருந்த பிரகலாதன் மற்றம் பிரணவன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களின் கடின முயற்சியினால் அணியில் பல இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டார்கள். ஆனால் அது எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியளிக்காதபோதும், அவர்களின் விடாமுயற்சியால் அணிக்கு ஒரு சில சிறந்த வீரர்களும் உருவாகினர்.
அத்துடன் அணியின் 08 ற்கும் மேற்பட்ட முன்னனி வீரர்கள் வெளிநாடுகளில் கப்பலில் தொழில் புரிகிறார்கள். சில மாதங்கள் விடுமுறையில் வரும் அவர்கள் மீண்டும் அணியுடன் இணைவார்கள். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ கப்பலில் பணியாற்றி விட்டு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விடுமுறையில் வரும் வீரர் ஒருவரிடம் அவர் தனது பழைய திறனிலேயே இருப்பார் என்று எதிர்பாக்க முடியாது. (இதற்கு விதிவிலக்கானவர்கள் சிலரையும் வல்வை அணி கண்டுள்ளது.) இவ்வாறு இரண்டு மாதங்கள் விடுமுறையில் வரும் வீரர் ஒருவர் தனது திறனுக்கு திரும்பும் தருவாயில் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கான அழைப்பு வந்துவிடும். இப்படியான பல பிரச்சனைகள் காணப்படுகிறது.
எனினும் தொடர் தோல்விகளால் அணி சிதறி இருந்தாலும் கூட வடமராச்சி பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து சுற்றுப்போட்டிகளிலும் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடந்த சுற்றுப்போட்டிகள் சிலவற்றிலும் அணி பங்கேற்றவண்ணமே இருந்து. “தோக்கிறதுக்கு இப்படி ஏன்டா அடிச்சுபிடிச்சுக்கொண்டு ஓடுறிங்கள்” என எம் பெற்றோரே எம்மை கேலி செய்யும் நிலை காணப்பட்டது. இவ்வாறான பல விமர்சனங்களையும் கடந்து அணித்தலைவர்கள் வழிநடத்திச் சென்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்ளுக்கு பின்னால் இருந்த சில ஆதரவாளர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. வல்வை அணி பங்குபற்றும் போட்டிகள் எந்தப் பிரதேத்தில் நடைபெற்றாலும் அங்கு வருகை தரும் அவர்கள், அணி தொடர் தோல்விகளில் துவண்ட பொழுதுகளில், அணியாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வீரர்களாக இருந்தாலும் சரி நாம் விடும் குறைஇ நிறைகளை எமக்கு சுட்டிக்காட்டி, மறுமுறை அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என ஆலோசனைகளை வழங்குவதோடு, நாம் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் போது பாராட்டி எம் ஆதரவாளர்கள் எமக்கு தந்த உச்சாகங்களளேயே அணியை கொண்டு நடாத்தமுடிந்தது என்றால் மிகையாகாது.
சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மற்றும் கப்பலில் தொழில் புரியும் எம் கழக முன்னால் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எமக்கு அளிக்கும் ஆதரவுகளை நாம் என்றைக்கும் மறக்க முடியாது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் அவர்கள் நேரடியாக மைதானத்திற்கு வருகைதந்தோ அல்லது அவர்களின் இல்லங்களுக்கு எம்மை அழைத்தோ கனிவுடன் எமது குறைநிறைகளை கேட்டறிந்து, அதற்கான தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளை கூறுவதோடு, அவர்கள் செய்யும் பணஉதவிகள் மற்றும் அணிக்கு தேவையான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி எம்மை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு எமது குறைநிறைகளை விளக்கி அதற்கான நிரந்தர தீர்வுகளையும் பெற்றுத்தருகிறார்கள். இப்படி பற்பல வழிகளில் எம் உறவுகள் எமக்கு அளிக்கும் ஆதரவுகளுக்கு “நன்றி” என்ற வார்த்தையை கூறி எங்களிடம் இருந்து பிரித்துப்பார்க்க விரும்பவில்லை.
மேலும் தற்போதைய நிலையில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டியதோடு, நாம் பெருமைப்படவும் வேண்டிய விடயம் என்ன என்றால், யாழ் மாவட்டத்தில் இன்று மாற்று அணி வீரர்களை இணைக்காமல் தமது கழக்திற்கு உரித்தான வீரர்களை வைத்து பங்குபற்றும் ஒரு சில அணிகளில் எம் வல்வை அணியும் ஒன்றானதாகும். இவ்வாறான இக்கட்டான நிலைகளை அணி சந்தித்த போதும் கூட எந்த ஒரு மாற்றுக்கழக வீரரையும் இணைத்து இதுவரை வல்வை அணி விளையாடியதில்லை. எம் பிரதேச வீரர்களை மாத்திரமே இதுவரை விளையாடி வந்துள்ளார்கள். இனியும் விளையாடுவார்கள்
இவ்வாறான பல சோதனைகளைக் கடந்துஇ நீண்ட காலங்களின் பின் சில மாதங்களுக்கு முன் இளந்தளிர் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில் நடாத்திய சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்து. மாவட்டத்தின் பல முன்னனி அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டி வரை முன்னேறி, துரதிஸ்ரவசமாக புளோலி வீனஸ் அணியிடம் அவர்களின் மைதானத்தில் வைத்து தோல்வி அடைந்திருந்தது.
தற்போது மீண்டும் குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்திய அணிக்கு 10 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் முறையில் நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் மொத்தம் 60 போட்டிகளை கொண்டதாக அமைந்திருந்தது. லீக் முறையில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில், முதல் போட்டியில் செந்தோமஸ் அணியினரிடம் தோல்வியடைந்திருந்தாலும், எஞ்சிய அணிகளான பருத்தித்துறை வி.க, நெடியகாடு இளைஞர், வீனஸ் மற்றும் நெல்லை பிளாஸ்ரர்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி காலுறுதிப்போட்டியில் நாவலர் விளையாட்டுக்கழகத்தை 22 ஓட்டங்களாலும், அரையிறுதிப்போட்டியில் மாலிசந்தி மைக்கல் அணியினை 05 இலக்குகளாலும் வீழ்த்திய வல்வை அணி இறுதிப்போட்டியில் வடமராச்சியின் பலம் பொருந்திய அணியான கரவெட்டி ஞானம்ஸ் அணியினை எதிர்கொள்கிறது.
இப்படியான பல வேதனைகள் சோதனைகளை கடந்து அணியினை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கும் அணித்தலைவர் பிரணவன், மற்றும் வீரர்களான பிரகலாதன், ருதேஷா, ஸ்ரீகரன், கபிலன்ம, ணிமாறன், உலகராசா, சஞ்சீவன், தர்சன், பிரசாந், விதுஷன், றொசான், ஜெகன், றஞ்சித் ஆகியோரை வாழ்துவதோடு, இறுதிப்போட்டியிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அருள் புரிவாராக…