இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட இந்திய அதிகாரியொருவர், தமிழ் நாட்டு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கமுடியாது. ஏனென்றால் இரட்டைக் குடியுரிமையை இந்தியா அங்கீகரிக்கவில்லை.வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்ற பிரிவை மட்டும் இந்தியா கொண்டிருக்கின்றது. இது பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்று வாழும் இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் தான் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை ஆவண ரீதியாக நிரூபிக்கவேண்டும். இலங்கைத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் அல்ல. தமிழ் நாட்டு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்ற முறையில் இந்தியாவின் குடியுரிமைச்சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும். இது ஒரு நீண்ட பணி எனவும் தெரிவித்தார்.